tamilnadu

img

காஷ்மீரில் காந்தி - ராமச்சந்திர குஹா,

“தற்போதைய பதற்றம் மிக்கச் சமயத்தில் நாம் காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக நிற்கவேண்டும். ஏனென்றால், காஷ்மீர் மக்களின் பதற்றம் நமது பதற்றமுமாகும். கருத்துச் சுதந்திரத்தையும், பேச்சுச் சுதந்திரத்தையும் அரசாங்கம் வழங்கியே தீரவேண்டும். அது மட்டுமே தற்போதைய நிலைமையை மாற்றிச் சீரமைக்க உதவும்” என்று காந்தி பீஸ் ஃபௌண்டேஷன் (காந்தி அமைதி அறக்கட்டளை) வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவித்துள்ளது. நீண்டகாலமாகக் காந்திஜி சொல்லிவந்த முறையில், காஷ்மீரில் இப்போது நிலவுகிற கவலையளிக்கத்தக்க நிலைமை குறித்து அவர்  என்ன கருதுவாரோ அதைச் சரியாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது என்றே சொல்லலாம். மகாத்மா காந்தி 1947 ஆகஸ்ட் முதல்வாரம் காஷ்மீர் பள்ளத்தாக்கிற்குச் சென்றார். அப்போது அவர் வயது 77. அதிக சிரமமான பயணம் அது. ஆனாலும் தனிப்பட்ட பொறுப்பும், தேசத்தின் கௌரவமும் அவரை அங்கே இட்டுச்சென்றது. 

இந்தியா அடுத்த சில நாட்களில் அடிமைப்படுத்தியவர்களிடமிருந்து விடுதலை அடையவிருக்கிறது – இரண்டு தேசங்களாக விடுதலை அடையவிருக்கிறது. ஜம்மு-காஷ்மீர் சமஸ்தானம் இந்தியாவுடன் சேரவிருக்கிறதா அல்லது புதிதாக உருவாகும் பாகிஸ்தானுடன் சேரவிருக்கிறதா என்கிற விஷயம் அப்போது தெளிவாகியிருக்கவில்லை. காஷ்மீர் மக்களில் மிக அதிகமானோர் முஸ்லிம்கள். அவர்களின் தலைவர் ஷேக் அப்துல்லா பாகிஸ்தானை நிராகரித்துவிட்ட, ஒரு முழுமையான மதச்சார்பற்றவர். காஷ்மீர் சமஸ்தானத்தை ஆளும் மன்னர் ஹரிசிங் இந்துமதத்தைச் சேர்ந்தவர். அவர் இந்தியாவுடனோ அல்லது பாகிஸ்தானுடனோ சேருவதென்று கருதவில்லை. காஷ்மீரை ஒருவிதமான கிழக்கு சுவிட்சர்லாந்தாக ஆக்கவேண்டுமென்பதே மன்னர் ஹரிசிங்கின் கனவு.

இரண்டு குறிக்கோள்

காந்திஜி இரண்டு குறிக்கோள்களுடன் காஷ்மீருக்குச் சென்றார் - ஒன்று: ஷேக் அப்துல்லாவைச் சிறையிலிருந்து விடுதலைசெய்ய மன்னரை ஒப்புக்கொள்ளவைக்க வேண்டும்; இது பற்றி மன்னரிடம் பேசவேண்டும். இரண்டாவது: தங்களின் எதிர்காலம் பற்றி காஷ்மீர் மக்களின் கருத்தை அறியவேண்டும்.  காஷ்மீர் பள்ளத்தாக்கில் மகாத்மா காந்திக்குப் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. ஸ்ரீநகருக்குச் சென்றபோது சாலையின் இருபுறங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் வரிசையாகக் கூடிநின்று வரவேற்றனர். “மகாத்மா காந்திகி ஜே!” என்று உற்சாக மகிழ்ச்சியுடன் முழக்கமிட்டார்கள். ஜீலம் நதிப் பாலத்தின் மீது நின்றிருந்த மக்கள் பிரமிக்கும் விதமாக, காந்திஜி ஒரு படகில் அமர்ந்து நதியைக் கடந்தார்.

ஷேக் அப்துல்லாவின் மனைவி ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தில் காந்திஜி பங்கேற்றுப் பேசினார். அரசியல் விவகாரம் மட்டுமல்லாமல் ஆன்மீக விஷயங்கள் குறித்தும் அவர் இந்துஸ்தானி மொழியில் பேசினார். அப்போது காந்திஜியுடன் சேர்ந்து காஷ்மீர் பள்ளத்தாக்கிற்குச் சென்ற டாக்டர் சுசீலா நாயர் இவ்வாறு எழுதினார்: “ சுற்றுப்புறக் கிராமங்களிலிருந்து பெண்களும் ஆண்களுமாக மிகப்பெரும் எண்ணிக்கையில் மகாத்மாவை நேரில் பார்ப்பதற்கு ஸ்ரீநகர்க்குத் திரண்டு வந்தனர். மக்களைக் கவர்ந்த சக்தியாக காந்திஜி இருப்பதால் அவரைக் கண்டு நண்பர்களும் எதிரிகளும் ஒரேவிதமாக ஆச்சர்யப்பட்டனர். காந்திஜியை நேரில் பார்ப்பதன் மூலம் ஏராளமானோர் எவ்வளவோ அமைதி பெற்றனர்.” 

நேருவுக்கு கடிதம்

காஷ்மீர் பள்ளத்தாக்கில் மூன்று நாட்கள், ஜம்முவில் இரண்டு நாட்கள் காந்திஜி செலவழித்தார். தமது காஷ்மீர் பயணம் பற்றிச் சுருக்கமான ஒரு கடிதம் எழுதி நேருவுக்கும் வல்லபாய் பட்டேலுக்கும் அனுப்பினார். மன்னர் ஹரிசிங், இளைய மன்னர் கரண்சிங் ஆகியோருடன் நடத்திய தமது பேச்சுவார்த்தைகளைப் பற்றி அந்தக் கடிதத்தில் காந்திஜி இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்: ‘பிரிட்டிஷின் முழு ஆதிக்கமும் அகற்றப்பட்ட  அந்தக் கணத்திலிருந்து காஷ்மீர் மக்களுக்கு முழுமையான உன்னதநிலை ஆரம்பமாகிவிட்டது என்று மன்னரும் இளைய மன்னரும் கூறினார்கள். இந்தியாவுடன் இணைய வேண்டும் என்பதே தங்கள் விருப்பம் என்றும், காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கு ஏற்பவே தங்கள் முடிவும் இருக்கிறது என்றும் அவர்கள் தெளிவாக்கினார்கள்.’
 

ஷேக் அப்துல்லா சிறையில் இருக்கும்போது அக்கட்சியின் மற்றத் தலைவர்கள் மீது எவ்வித நிர்ப்பந்தமும் இல்லை. மகாத்மா காந்தி இவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார். ‘இந்தத் தலைவர்கள் மிகவும் நம்பிக்கையுடனேயே இருக்கிறார்கள்.  வயதுவந்தோர்க்கு வாக்குரிமை அடிப்படையில் தேர்தல் நடைபெற்றால் அல்லது தற்போதைய வாக்காளர் பட்டியல் அடிப்படையில் தேர்தல் நடைபெற்றால் இந்தியாவுடன் இணைவதற்கு ஆதரவாகக் காஷ்மீர் மக்கள் வாக்களிப்பார்கள் என்று தேசிய மாநாடு கட்சித் தலைவர்கள் கூறினார்கள். ஆனால், அதற்கு முன்பு ஷேக் அப்துல்லாவையும், அவருடன் சகக் கைதிகளாக உள்ளவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று சொன்னார்கள்’ என நேருவுக்கும் வல்லபாய் பட்டேலுக்கும் அனுப்பிய கடிதத்தில் காந்திஜி குறிப்பிட்டிருந்தார். 1947 ஆகஸ்ட் 15 அன்று காந்திஜி தில்லியில் இருக்கவில்லை; கல்கத்தாவில் இருந்தார். தேசமெங்கும் இந்து-முஸ்லிம் மதக்கலவரங்கள் அதிகரித்துக் கொண்டிருந்ததால் அவர் சுதந்திரக் கொண்டாட்டத்தில் சிறிதளவும் பங்கேற்கிற மனநிலையில் இல்லை. கல்கத்தாவில் அமைதி திரும்ப வேண்டி அங்கு உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டார். தில்லியில் நிலைமை சீரான பிறகு நம்பிக்கையுடன் நாட்டின் தலைநகருக்குத் திரும்பினார்.

“காஷ்மீரை மன்னர் காப்பாற்றவில்லை”

1947 செப்டம்பரில் ஷேக் அப்துல்லா சிறையிலிருந்து  விடுதலை செய்யப்பட்டார். மூன்று வாரங்களுக்குப் பிறகு  பாகிஸ்தான் காஷ்மீர் மீது ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் இறங்கியது. அந்த மாநிலத்தைப் பலப்பிரயோகத்துடன் தனக்குச் சொந்தமாக்கிக் கொள்வதே பாகிஸ்தானின் நோக்கம். பாகிஸ்தானின் அக்கிரமத்திற்கு எதிராக ஷேக் அப்துல்லா மக்களை அணுகினார். ஆக்கிரமிப்பாளர்களை மக்கள் வலுவாக எதிர்த்தார்கள். காஷ்மீர் மக்களின் சாகசமிக்கத் துணிச்சலைக் கேள்விப்பட்ட காந்திஜி 1947 அக்டோபர் 29 அன்று தில்லியில் நடைபெற்ற ஒரு பிரார்த்தனைக் கூட்டத்தில் இவ்வாறு சொன்னார்: ‘காஷ்மீரை மன்னர் காப்பாற்றவில்லை; காஷ்மீரைக் காப்பாற்றக்கூடியவர்கள் யாரென்றால் அவர்கள் முஸ்லிம்கள், காஷ்மீர் பண்டிட்டுகள், ராஜபுத்திரர்கள், சீக்கியர்கள் மட்டுமே. இவர்கள்தான் காஷ்மீரைக் காப்பாற்றுவார்கள்.’ என்றார். மேலும் அவர் கூறுகையில், ‘இந்தச் சமூக வகுப்பினராகிய அனைவரிடமும் ஷேக் அப்துல்லாவுக்குப் பாராட்டத்தக்க நட்புறவு உண்டு.’ என்றார். ஷேக் அப்துல்லாவுக்கு காந்திஜி மிகவும் பொருள்பொதிந்த வாழ்த்துத் தெரிவித்தார்.

காந்தியுடன் ஷேக் அப்துல்லா...

ஒரு மாதத்திற்குப் பிறகு இந்திய இராணுவ வீரர்கள் பாகிஸ்தானின் ஆத்திரமூட்டும் தாக்குதலைத் துரத்தியடித்துப் பெரும் வெற்றிபெற்றவுடன் ஷேக்அப்துல்லா தில்லிக்கு வந்தார்.  1947 நவம்பர் 28 அன்று காந்திஜியின் பிரார்த்தனைக் கூட்டத்தில் அவருக்கு அருகிலேயே ஷேக் அப்துல்லா அமர்ந்திருந்தார். பிரார்த்தனைக்குப் பிறகு காந்திஜி இவ்வாறுகூறினார்: ‘ஷேக் அப்துல்லா ஒரு பெரும்பணி ஆற்றினார். காஷ்மீரில் இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், அனைவரையும் சமமாகப் பாவித்தார்; எல்லோரும் சேர்ந்து ஒற்றுமையாக வாழவேண்டுமென்பதை அவர்களின் மனதில் ஆழமாகப் பதித்துவிட்டார்.’ 1948 ஜனவரி 30 அன்று இந்துத்துவா மதவெறியன் கோட்சேயின் கொடூரச் செயலுக்குக் காந்திஜி பலியானார். அதற்குப் பிறகு எழுபது ஆண்டுகளாக காஷ்மீர் ஒரு கலவரத்திலிருந்து மற்றொரு கலவரத்திற்கு இடைவிடாமல் இலக்காகிக்கொண்டே இருக்கிறது. அரசின் அடக்குமுறை நடவடிக்கைகளும் மதவெறியும் இந்த இணையில்லா அழகு பூமியாகிய காஷ்மீரை வன்முறைகள் நிறைந்த சீர்குலைந்த பூமியாக மாற்றிவிட்டன.

காந்தி இருந்திருந்தால்

 

காந்திஜி ஒருவேளை இன்றுவரை வாழ்ந்திருந்தால் காஷ்மீரின் நவீன வரலாற்றில் மூன்று நிகழ்வுகளை முடிந்தவரை நடைபெறாமல் செய்திருப்பார். 1953-இல் ஷேக் அப்துல்லாவை நேருவின் அரசு கைதுசெய்தது; 1989-90-இல் இஸ்லாமிக் ஜிஹாதிகள் காஷ்மீர் பண்டிட்டுகள் மீது நடத்திய வன்முறை; 2019-இல் மோடி அரசாங்கம் காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ ரத்துசெய்தது ஆகிய மூன்று நிகழ்வுகளும் நடைபெறாமல் செய்திருப்பார் காந்திஜி.  சட்டப்பிரிவு 370-ஐ ரத்துசெய்தது மகாத்மாவை ஏதாவதொரு விதத்தில் அச்சமுறச் செய்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. காந்திஜியின் 150-வது பிறந்ததின விழா ஆண்டில் ‘மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப முடிவு செய்வதை’ இந்திய அரசு நிராகரித்துவிட்டது. மேலும், காஷ்மீர் பள்ளத்தாக்கு  மனித வரலாற்றிலேயே மிகப்பெரிய திறந்தவெளிச் சிறைச்சாலையாக மாறிவிட்டது. காஷ்மீரின் நிகழ்கால மாற்றங்களைக் குறித்து விவரிப்பதற்கு காந்திஜி இப்போது நம்மிடம் இல்லை. ஆனால், அவரது கொள்கைகளைப் பேசுபவர்கள் உள்ளனர். அமைதி, அகிம்சை இலட்சியத்துடன் 1959-இல் அமைக்கப்பட்ட பிரபல சேவை அமைப்பாகிய காந்தி பீஸ் ஃபௌண்டேஷன் (காந்தி அமைதி அறக்கட்டளை) என்கிற சுயேச்சையான அமைப்பு காஷ்மீர் குறித்து அண்மையில் ஓர் அறிக்கை வெளியிட்டது.)
 

‘ஒரு மாநிலமே மறைந்துவிட்டதே!’

இந்தி, ஆங்கிலம் மொழிகளில் வெளியிடப்பட்ட காந்தி பீஸ் ஃபௌண்டேஷனின் அறிக்கை இவ்வாறு கூறுகிறது : ‘ஆகஸ்ட் 5 அன்று பட்டப்பகலிலேயே நம் தேசத்தின் ஒரு மாநிலமே தேசவரைபடத்திலிருந்து முழுவதுமாக மறைந்துவிட்டது. இந்தியாவில் இப்போது 29 மாநிலங்களுக்குப் பதிலாக 28 மாநிலங்கள் மட்டுமே உள்ளன. இது ஏதோ பொய்யான, இல்லாத இந்திரஜாலக் காட்சி அல்ல. நாம் முழுக் குரூரமான, ஜனநாயக நெறிகளற்ற மாற்றங்களைப் பார்க்கிறோம். இது, நமது ஜனநாயக அரசியலின் வறுமையையும் அறிவின்மையையுமே வெளிப்படுத்துகிறது. இந்தப் பதற்றம் நிறைந்த காலத்தில் நாம் காஷ்மீர் மக்களின் பக்கம் நிற்க வேண்டும். ஏனென்றால், காஷ்மீர் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நமக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியாகும்’.

அரசியல் மகாராஜாக்கள்

காஷ்மீர் மக்களைக் காப்பாற்றுகிறவர்கள் நாங்கள்தான் என்கிற மாதிரி பேசுகிற இன்றைய அரசியல் மகாராஜாக்கள் காஷ்மீர் மக்களைக் காப்பாற்றவில்லை. அவர்களின் நலனுக்காக உறுதியான நடவடிக்கை ஏதும் இல்லை. இந்த அரசியல் மகாராஜாக்களுடைய கார்ப்பரேட் மகாராஜாக்களும் காஷ்மீர் மக்களுக்குச் சிறிதளவும் நன்மை செய்யவில்லை. பாகிஸ்தான் ராணுவமோ, அவர்களின்  ஜிஹாதிப் பிரதிநிதிகளோ காஷ்மீர் மக்களைக் காப்பாற்றவில்லை. பல பத்தாண்டுகளாக இந்த ஜிஹாதிகளின் தூண்டுதலால் திசைமாறிய காஷ்மீர் இளைஞர்கள் தீவிரவாதத்தில் இறங்கி இளம்வயதிலேயே தங்கள் வாழ்க்கையைத் துயரத்தில் ஆழ்த்திவிடுகிற செயல்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.

நாம் ஓய்ந்துவிடவே கூடாது

புவியியல் ரீதியாக முக்கியமான இடத்தில் அமைந்துள்ள, துயரம் நிறைந்த வரலாற்று பாரத்தைச் சுமந்து கொண்டிருக்கும் காஷ்மீர் பல பத்தாண்டுகளாக நிகழ்ந்துவரும் மோதல்களால் இரத்தம் சிந்தும் களமாகிவிட்டது. எனவே, தேசப்பிதாவின் அறிவுரையை மறந்துவிடாமல்-ஒதுக்கிவிடாமல் இந்திய மக்கள் அனைவரும் காஷ்மீரைப் பெரும் கஷ்டமான சூழலிலிருந்து காப்பாற்றுவதற்குத் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டே இருக்க வேண்டும். இந்த இலட்சியத்தை முழுமையாக அடைகிறவரை எந்தக் காரணத்தாலும் அதிலிருந்து ஓய்ந்துவிடக் கூடாது. பேச்சுவார்த்தையிலும் நடவடிக்கையிலும் நேர்மை, முன்யோசனை, சாதகமா பாதகமா எனும் பகுத்தாய்வு, நடவடிக்கைகளில் அகிம்சை, அன்றாட வாழ்க்கையில் மதநல்லிணக்கத்தைக் காப்பாற்றுதல் ஆகிய இந்தக் கடமைகளை-வழிகாட்டுதலை-வாழ்க்கை நெறிகளை இந்தக் கடும் நெருக்கடியான நாட்களில் உத்வேகத்துடன் பின்பற்ற வேண்டும். 

நன்றி: ஆந்திரஜோதி (தெலுங்கு நாளிதழ் 17.8.2019) 
தமிழில்: தி.வரதராசன்